Sunday, May 7, 2017

நதியோரம்! சதி நேரம் - 2

வரதராஜ புரமே ஆரவல்லி நதிக் கரையில் கூடி விட்டது !
ஆளாளுக்கு அதிர்ச்சியில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்!
அந்த சமயத்தில் சைரன் ஒலியோடு ஆம்புலன்ஸும், போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்தன !

இன்ஸ்பெக்டர் அமரேந்திரன் முன் சீட்டில் இருந்து கீழ் இறங்கினார் !

6 அடி உயரத்தில், தமிழக போலீஸின் முக்கிய அங்கமான தொப்பை சற்றும் குறைவில்லாமல் அதைக் கஷ்டப்பட்டு பெல்ட்டுக்குள் அடக்கியிருந்தார்  அல்லது அடக்க முயற்சி செய்திருந்தார் ! தொங்கி நிமிர்ந்த மீசையை தன் பையில் இருந்த சிறு சீப்பினால் சீவினார்!, தொப்பியைக் கழற்றி, பளிச் சென்றிருந்த தன் முன் வழுக்கையை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே அணிந்திருந்த கூலிங் கிளாஸைக் கழற்றி சட்டைப் பையில் வைத்தார் !  தூக்கமின்மையும் நேற்று அருந்திய திரவத்தின் எச்சமும் சிவப்பு வரிகளாய், கண்ணின் கீழே அணிவகுத்தன !

யாருய்யா இதைப் பார்த்தது ? வரச் சொல்லு என்று அங்கிருந்த ஒரு மர நிழலில் போய் நின்றார் !
பயந்து நடுங்கிக் கொண்டே அமுதா, கருப்பாயி, வேலாயி மூவரும் முன் வந்து நின்றனர் !
யாரும்மா முதல்ல பார்த்தது ? என்று கேட்டதும் வேலாயி மெல்லக் கையுயர்த்தி நான் தானுங்கய்யா என்றாள் ! நாய் குலைச்சி எதையோ இழுத்துச்சுங்கய்யா ! நான் அதை விரட்டப் பார்த்தப்ப புதர் நடுவுல வந்து ........ என்றாள் இன்னும் பதற்றம் குறையாத வேலாயி !

அவள் சொல்வதை அப்படியே குறித்துக் கொண்ட அமரேந்திரன்,  ஏட்டய்யாவிடம் மாரிமுத்து, ஃபாரன்ஸிக் டீம் வந்தாச்சா ?  பாடி கிட்ட எதும் தடயம் கிடைக்குதான்னு பார்த்திங்களா ? சின்னய்யா குடும்பத்துல இருந்து யாரும் வந்திருக்காங்களா என்று வரிசையாய்க் கேட்டுக் கொண்டே  கான்ஸ்டபிள்களைக் கூட்டத்தை விலக்குமாறு சொல்லிக் கொண்டே  "எலேய் ! யாரும் பொணத்தைத் தொடல்லியே! வெலகுங்க, வெலகுங்க, என்று விழி விரித்து இறந்து கிடந்த சின்னைய்யாவிற்கு அருகில் வந்தார் !

கண்கள் மேலே செருகி, கழுத்து, மார்பு , கை , கால் என்று பல இடங்களில் வெட்டு வாங்கி கொடூரமாகச் செத்திருந்தார் சின்னய்யா ! அவர் அணிந்திருந்த கண்ணாடி அருகில் நொறுங்கி விழுந்து கிடந்தது !
அப்போது தான் கவனித்தார் ! சின்னைய்யா வின் இரு கைகளிலும் நடு விரல் வெட்டப் பட்டிருப்பதை !

Dog Squad  வந்து சேர்ந்தது !  மெல்ல  சடலம் இருந்த இடத்தை முகர்ந்து விட்டு கரையின் உள்ளே ஓட ஆரம்பித்தது போலிஸ் நாய் ஸீசர் !  தொடர்ந்து அதன் ட்ரெய்னரும் கான்ஸ்டபிளும் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே அமரேந்திரன் சீப்பை எடுத்து தனது மீசையை சீவிக் கொண்டார் !

அப்போது சார்..!!!!!!

என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க ஓடி வந்த கான்ஸ்டபிள்

சார் ..!

சார்....! அங்க
.
.
.
.
.
.அங்கே
என்று முடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார் !

என்ன நாகராஜ் என்னாச்சுய்யா என்று வினவ

சார் ! அங்கேயும் ஒரு பொணம் சார் ....!

என்று பதற,

அமரேந்திரனுக்கு சட்டென்று இதயம் நின்று துடித்தது !

இந்த கேஸ் நம்மைச் சக்கையாக அலைக்கழிக்கப் போகிறது ......!! என்று தன் தலையைக் கர்சீப்பால் துடைத்தார் !

.... தொடரும் !

நதியோரம் சதிநேரம் - 1

மெல்ல இருள் படலம் நீங்கி, சூரியன்  சோம்பல் முறித்து உதயமாக ஆயத்தமானான் ! பறவைகள் தங்கள் கடமைகளை எண்ணி வரிசையாய்ப் பறக்க ஆரம்பித்தன !
அந்த வரதராஜ புரத்தின் ஆரவல்லி நதியில் மிச்ச மீதி எச்சங்கள் நடுவே இருக்க, அள்ளியது போக மீதி இருந்த மணல் பிரதேசங்கள் எனது வாழ்வு இன்னும் எவ்வளவு நாளோ என்று ஒதுங்கிக் கிடந்தன !

கடமைக்காகக் கூவிய சேவல் ஒலி கேட்டு, கருப்பாயி விழித்துக் கொண்டாள் !

"அடக் கெரகமே ! பொழுது விடிஞ்சில்ல போச்சு ? தூங்கிட்டுல்ல கிடந்துருக்கோம்?
யோவ் எந்திரிய்யா ! பொசபொசன்னு விடிஞ்சி போச்சு, வயலோரம் போய் வாரேன்!  ஆச்சி வீட்ல பாலை வாங்கி காய்ச்சி வையி என்று சொல்லி கிளம்பினாள்!
அந்த ஊருக்கு கழிப்பறை, குளியலறை, துணி துவைக்கும் இடம், இதர பிற விஷயங்களுக்கும் அந்த ஆரவல்லி நதி தீரம் தான் ஒரே வழி !
அடுத்த வீட்டு அமுதாவையும், எதிர் வீட்டு வேலாயியையும் அழைத்துக் கொண்டு மூவரும் அந்த நதியோர புதர்களிடையே சென்று மறைந்தார்கள் !

சற்று நேரத்தில் ..... !

#வீல்.......! ஐயோ என்ற சத்தம் வேலாயிடம் இருந்து!

என்னடி ஆச்சு ! கூவுற என்று கேட்டபடி பதறி வந்த கருப்பாயியும், அமுதாவும் அதிர்ச்சியாகி  வேலாயியோடு  சேர்ந்து  கத்த ஆரம்பித்தார்கள் !
.
.
.
.
.
.
அங்கே .......!!

.
.
.
.
.
.
.
.
. ஊர் பெரிய மிராசு சின்னைய்யா உயிரற்ற விழிகளோடு  புதரின் மறைவில் வெட்டுக் காயங்களோடு விழுந்து கிடந்தார் !

...... தொடரும்

.

.